வேர் அறுந்த உறவு... கை கொடுத்த நட்பு!
வருடப்பிறப்பு அதிகாலை. புதிய தொழில் தொடங்குவதற்கான கோப்புகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த குமணனின் முகத்தில் ஒருவிதமான பதற்றம் கலந்த ஆர்வம் குடிகொண்டிருந்தது.
"சாரு, எல்லா ஏற்பாடுகளும் முடிஞ்சிருச்சு. ஆனா, கையிருப்பு பத்தாது போல இருக்கு. அப்பா கிட்ட உதவி கேட்கலாம்னு இருக்கேன்," என்றான் மெல்லிய தயக்கத்துடன்.
சாருலதா அவனை அன்போடு இடைமறித்தாள். "ஏங்க, அப்பா ரிட்டயர்ட் ஆகி அமைதியா இருக்கார். அவர்கிட்ட எதுக்கு இப்போ? என் அண்ணன் பூர்வீகச் சொத்தை விக்கப் போறதா சொன்னார்ல? என் பங்கை நான் கேட்டு வாங்குறேன். அதை வச்சு உங்க பிசினஸை ஆரம்பிங்க," என்றாள் உரிமையோடு.
குமணனும் ஒரு நிமிடம் யோசித்து, "சரி, உன் இஷ்டம்," என்றான்.
இரண்டு மணி நேரம் கழித்து அண்ணனைச் சென்று பார்த்து வீடு திரும்பிய சாருலதாவின் முகம் வாடி இருந்தது. வாசலில் ஸ்கூட்டர் நிற்கும் சத்தம் கேட்டதுமே குமணன் ஓடி வந்தான். உள்ளே வந்தவள் பையைத் தூக்கி எறிந்தாள்.
"என்னாச்சு சாரு? அண்ணன் என்ன சொன்னார்?"
"அவர் அண்ணன் இல்லை, வெறும் பணப் பிசாசு!" என்று வெடித்தாள் சாரு. "அவர் பொண்ணுக்கும் பையனுக்கும் செய்யவே பணம் பத்தலையாம். அதுமட்டுமில்லாம, 'உனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே பெரிய விஷயம், இதுல சொத்துல வேற பங்கு வேணுமா?'ன்னு கேவலமாப் பேசுறார். என் உரிமையைக் கேட்கப் போய், என் மரியாதையே போயிருச்சுங்க. நீங்க உங்க அப்பாவையே கேளுங்க," என்று அழுதுவிட்டாள்.
குமணன் கனத்த இதயத்துடன் தனது தந்தையிடம் சென்றான். விவரத்தைச் சொன்னதும், அவர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். "மன்னிச்சுடுப்பா... வயசான காலத்துல எனக்கு மருத்துவச் செலவு அதிகமாயிட்டே இருக்கு. சேமிப்பு எல்லாம் அதுக்கே சரியா இருக்கு. இப்போதைக்கு என்னால கை கொடுக்க முடியலையே," என்றார் இயலாமையுடன்.
நம்பிக்கை வைத்த இரண்டு இடங்களும் கதவை அடைத்ததில் குமணன் நிலைகுலைந்து போனான். வீட்டின் திண்ணையில் அமர்ந்து சூன்யத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் தோளை ஒரு கை அழுத்தியது. நிமிர்ந்து பார்த்தால் அவன் நண்பன் ரகு.
குமணன் எதையும் சொல்லவில்லை, ஆனால் ரகுவின் கண்களில் எல்லாம் புரிந்தது. ஒரு செக் புத்தகத்தை நீட்டிய ரகு, "இந்தா பிடி... நீ கேட்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். ஆனா, உன் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இது உன் நண்பனோட முதலீடு, கடனா நினைக்காதே. கிளம்பு... இன்னைக்கு நல்ல நாள், தொழிலை ஆரம்பி!" என்றான் புன்னகையுடன்.
"உடுக்கை இழந்தவன் கைபோலஉறவுகள் கைவிட்ட இடத்தில், ஒரு நட்பு கைகொடுத்தது. குமணனின் கண்களில் இப்போது நீர் இல்லை, சாதிக்கத் துடிக்கும் நெருப்பு தெரிந்தது.

Comments
Post a Comment